Thursday, December 27, 2012

தமிழில் நீர்நிலைப் பெயர்கள்


ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால்,நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.



(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.





(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.


(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.




(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும்
பயன்படும் நீர் தேக்கம்.


(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.


(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.


(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.


(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.


(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும்
வாய்க்கால் வழி ஓடும் நீர்.


(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல்,
செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.



(12) கடல் (Sea) - சமுத்திரம்.


(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு
வழங்கும் பெயர்.


(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர்
தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால்
உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர்
செல்லும் அமைப்பு.


(15) கால் (Channel) - நீரோடும் வழி.


(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு
நீர் ஊட்டும் வழி.


(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.


(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும்
நீர் நிலை.


(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.


(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.


(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை
மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.


(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.


(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.


(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.


(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.


(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி
அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.


(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.


(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.


(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.

(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.


(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும்
கட்டப்பட்ட குளம்.


(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும்
சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.


(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய
பகுதியில் ஏரியை குறிக்கும்.


(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.


(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall)
- ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.


(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.


(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும்
படிக்கட்டமைந்த பெருங்கிணறு.


(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன்
கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.


(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே
அமைந்த கிணறு.


(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால்
கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.


(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.


(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.


(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.


(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும்
உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.


(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய
வாய்க்கால்.


(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.


(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.


நன்றி: தமிழர் வரலாறு ( முகநூல் பதிவு )

Tuesday, December 18, 2012

தாழ்வு மனப்பான்மை (inferiority complex)


தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தாம் குறைவானவர்கள், கீழ்நிலையில் உள்ளவர்கள், எதற்கும் பிரயோசனம் இல்லாதவர்கள் என்றே தம்மைப் பற்றிக் கருதுவார்கள். பலர் மனஅழுத்தத்தில் உழல்வார்கள். தற்கொலை செய்து கொள்ளக் கூடிய அபாயம் இவர்களில் உண்டு.
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.)

உங்களிடம் தாழ்வு மனப்பான்மை இருந்தால் முதலில் அதை நீங்கள் ஒழிக்கவேண்டும். 
தாழ்வு மனப்பான்மைதான் உங்கள்  முன்னேற்றத்திற்கான மிகப் பெரிய ததடைக் கல்லாகும்..தாழ்வு மனப்பான்மை ஒருவரது தன்னம்பிக்கையைத் தகர்த்து எறிந்து விடும். எதையும் தோல்விகரமான மனப்பான்மையிலேயே எண்ணத் தோன்றும்.சிலர் வறுமையான குடும்பத்தில் பிறந்து இருப்பார்கள். 

பள்ளியில் படிக்கும்போதும் சரி கல்லூரியில் படிக்கும்போதும் சரி இவர்கள் வசதியான பிள்ளைகளுடன் சேர்ந்து படிக்க வேண்டிய சூழ்நிலை இருந்திருக்கும்.வசதியான பிள்ளைகள் அணிந்திருக்கும் உடைகள், செலவு செய்யும் மனப்பான்மை, உணவுப் பழக்க வழக்கங்கள் முதலியவை இவர்கள் மனதைப் பெரிதும் காயப்படுத்தி இவர்களுடைய தன்னம்பிக்கையை இழக்க வழி செய்கிறது. அதுவே அவர்களிடத்து  தாழ்வு மனப்பான்மை உண்டாகக் காரணம் ஆகிறது. 

இந்தத் தாழ்வு மனப்பான்மை காலப்போக்கில் மற்றவர்கள் தங்களை மதிக்க வேண்டும் பாராட்ட வேண்டும் என்ற ஆசையினால் நியாயத்திற்குப் புறம்பான செயல்களில் ஈடுபட ஆரம்பித்து விடுகிறார்கள். 

காலப்போக்கில் உண்மை தெரிந்த உடன் மிகவும் மனம் நொடிந்து போய் எந்தக் காரியத்தில் ஈடுபட்டாலும் அவ நம்பிக்கையுடன் ஈடு படுகின்றனர். 

தாழ்வு மனப்பான்மை உங்கள் தோற்றத்தையே மாற்றி மற்றவர்கள் உங்களை வெறுக்கும் அளவுக்கு செய்து விடும். 

சிலருக்குப் படிக்கும் காலத்திலேயே தாழ்வு மனப்பான்மை உண்டாகிவிடும்.  அதன் விளைவாகச் சரியாகப் பாடங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போய் குறைவான மதிப்பெண் 
எடுப்பார்கள். மனம் நொந்து போய் இனி நம்மால் அதிக மதிப்பெண்கள் எடுக்க முடியாது என்ற தவறான முடிவுக்கு வந்து விடுவார்கள். 

பள்ளியில் நன்றாகப் படிக்காத எத்தனையோ பேர் நாட்டில் முதல் மந்திரிகளாகவும் பிரதம மந்திரிகளாகவும் இருந்துள்ளார்கள். இதற்க்கு சரியான உதாரணம் மறைந்த பெருந்தலைவர் 
காமராஜர் ஆவார்கள். 

பள்ளிப் படிப்பு என்பது ஒருவருடைய  வாழ்க்கையை ஓரளவு தான் நிர்ணயம் செய்யும். ஒருவருடைய  வளமான வாழ்க்கையைத் தீர்மானம் செய்ய வாழ்க்கையில் எத்தனையோ வழிகள் உள்ளன.

பிறக்கும் குழந்தைக்குத் தாழ்ந்தவரா உயர்ந்தவரா என்று தெரியாது. உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்பதெல்லாம் சுய நலம் உள்ள மனிதர்களால் ஏற்படுத்தப்பட்டவை. படைப்பில் எவரும் உயர்ந்தவர் அல்ல தாழ்ந்தவர் அல்ல. அனைவருமே சமம்.  

இது போன்று தாழ்வு மனப்பான்மை உண்டாகப் பல காரணங்கள் கூறலாம். தாழ்வு மனப்பான்மையை உங்கள் மனதிலிருந்து விரட்ட வேண்டும் என்றால் முதலில் நம்பிக்கை எனும் விதையை உங்கள் மனதில் விதிக்க வேண்டும். 

நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற நம்பிக்கை விதையை மனதில் ஊட்டித் தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறியுங்கள்.   

நம்பிக்கை எனும் விதையை ஊட்டுவதற்குத் தியானம் பெரிதும் உதவுகிறது. தியானம் எனும் அறிய கலையின் மூலமாக தாழ்வு மனப்பான்மையினைத் தகர்த்து எறியலாம். 

தியானம் செய்வதின் மூலமாகச் சிந்தனைத் திறன் சரியாக வேலை செய்து நாம் எவருக்கும் தாழ்ந்தவர் அல்ல என்ற உண்மையினை  உணரச் செய்து  ஒருவரது மனதில் இருந்து தாழ்வு மனப்பான்மையினை தூக்கி எறியச்  செய்கிறது. 


Tuesday, December 11, 2012

தமிழ் ஒரு கடல்!!


 


“கல்வி கரையில, கற்பவர் நாள் சில” என்பது ஆன்றோர் வாக்கு. கலைமகளும் கூட “கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு” என்று கூறினார். 


தமிழ் மொழியிலுள்ள இலக்கியங்களை எல்லாம் ஒருவர் கணக்கெடுத்தால் அவையனைத்தையும் கற்றறிய ஒரு வாழ்நாள் போதாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனியெனப் புலப்படும்.


உலகில் பழமையான இலக்கியம் படைத்த மொழிகள் ஒரு சில மொழிகளே. தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், எபிரேயம், சீனம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம். ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் தன் சீரிளமைத்திறம் குன்றாதது தமிழ். இந்தக் காலக் கட்டத்தில் வளர்ந்த முக்கிய சில நூல்களின் நீளத்தை அல்ல து அளவை மட்டும் சிறிது சிந்தித்துப் பார்ப்போம். 


சங்க இலக்கியம் என்பதில் எட்டு நூல்களைக் கொண்ட எட்டுத்தொகையும் பத்து நூல்களைக் கொண்ட பத்துப்பாட்டும் அடக்கம். இந்த 18 நூல்களில் 473 புலவர்கள் பாடிய 2381 பாடல்கள் உள்ளன. ஏறத்தாழ 30,000 வரிகள்! ஒரு நாளைக்கு நூறு அடிகள் வீதம் படித்தாலும் கூட சங்க இலக்கியத்திற்கு மட்டும் முந்நூறு நாட்கள் தேவைப்படும்.!!

இதற்கு முன்னர் எழுந்த தொல்காப்பியம், அதற்குப் பின்னர் எழுதப்பட்ட சிலப்பதிகாரம், மணிமேகலை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், ஏழாம் நூற்றாண்டு முதல் பெருகிய பக்தி இலக்கியங்கள் (தேவாரம், திருவாசகம், திவ்வியப் பிரபந்தம்) ஆகிய அனைத்திலுமுள்ள பாடல்களை எண்ணிக் கூட்டினால் தமிழைக் கற்பதற்குப் பல பிறவிகள் எடுக்க வேண்டும் என்பதை உணர்வீர்கள். 


கையில் ஒரு கணக்கிடும் கருவியை (கால்குலேட்டர்) வைத்துக்கொண்டு பின்வரும் செய்யுட்களின் எண்ணிக்கையைக் கூட்டுங்கள். ஒவ்வொரு நாளும் நீங்கள் எவ்வளவு செய்யுட்களை நன்கு மனதில் பதியுமாறு படிக்க முடியும் என்பதைத் தீர்மானித்து அதனால் இந்தச் செய்யுட்களின் எண்ணிக்கையை வகுத்துப் பாருங்கள். இப்படிச் செய்தால் இனி ஒரு வினாடி கூட தாமதிக்காமல் தமிழைப் படிக்கத் தோன்றும். ஒரு அறை முழுவதும் பொன்னும் மணியும் குவித்து வைக்கப்பட்டுள்ளது. உங்கள் கையில் அறைக்கான சாவியும் (தமிழ் அறிவு) உள்ளது. இனியும் தாமதிப்பது நியாயமா?

புள்ளிவிபரம்

தொல்காப்பியம் 3,999 அடிகள் 

எட்டுத்தொகையும் பத்துப்பாட்டும் 30, 000 அடிகள்

சிலப்பதிகாரம் 5,001 அடிகள்

மணிமேகலை 4,759 அடிகள்

பெருங்கதை 16,230 அடிகள்


பாடல் கணக்கு

பதினெண் கீழ்க்கணக்கு (குறள் உள்பட 18 நூல்கள்) 3,250 பாடல்கள்

கம்ப ராமாயணம் 10,500 பாடல்கள்

சீவக சிந்தாமணி 3,145 பாடல்கள்

திவ்யப் பிரபந்தம் (ஆழ்வார் பாடியவை) 4,000 பாடல்கள்

பன்னிரு திருமுறை 18, 326 பாடல்கள்

தாயுமானவர் 1,454 பாடல்கள்

அருணகிரி 1,361 பாடல்கள்

இராமலிங்க சுவாமிகள் 5,800 பாடல்கள்

முக்கியமான சில பாடல் தொகுப்பை மட்டுமே கொடுத்துள்ளேன். பாரதி வரையுள்ள ஆயிரக்கணக்கான புலவர்களின் பாடல்களை எல்லாம் கணக்கிட்டால் அந்த நூல்களின் பெயர்களை எழுத மட்டுமே தனியாக ஒரு நூல் தேவைப்படும். தமிழ் ஒரு பெருங்கடல்! முத்துக்குளிப்போம் வாருங்கள்!



(நன்றி :சந்தானம் சுவாமிநாதன்) 

Tuesday, December 4, 2012

விண்டோஸ் வேகமாக இயங்க


நமது உடலை இயங்க வைக்க உயிர் தேவை. உயிரற்ற உடலைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதுபோல் கம்ப்யூட்டர் என்ற ஹார்ட்வேரை (அதாவது உடலை) இயங்க வைக்க ஆப்பரேட்டிங் சிஸ்டம் (அதாவது உயிர்) தேவை. 


ஆப்பரேட்டிங் சிஸ்டம் இல்லாத கம்ப்யூட்டரைக் கொண்டு எந்தப் பயனுமில்லை. அதை ஒரு அலங்காரப் பொருளாக வேண்டுமானால் பார்த்துக் கொண்டிருக்கலாம். கம்ப்யூட்டரும், ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒன்றையொன்று சார்ந்து நிற்கின்றன. இது இல்லாமல் அது இல்லை; அது இல்லாமல் இது இல்லை.


உலோகம் மற்றும் பிளாஸ்டிக் கொண்டு ஆக்கப்பட்ட உயிரற்ற ஒரு பொருள்தான் கம்ப்யூட்டர். கார், பைக், மிக்ஸி, டிவி போன்ற பொருட்களை எடுத்துக் கொண்டால், இன்ன வேலைகளைச் செய்ய வேண்டும் என்று வரையறுக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆனால் இன்ன வேலையைச் செய்ய வேண்டும் என்று கம்ப்யூட்டருக்கு வரையறுக்கப்படவில்லை. தருகிற ஆணைகளை (Instruction) ஒழுங்காகப் பின் பற்றும்படி அதற்குக் கூறப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பின்பற்ற வேண்டிய ஆணைகள் அடங்கிய பட்டியலை புரோகிராம் என அழைக்கிறோம். புரோகிராமை கம்ப்யூட்டர் இயக்குகிறது (Execute) எனச்சொல்லுவது, ஒவ்வொரு ஆணையையும் வரிசையாக மேற்கொள்வதைத்தான் குறிக்கிறது.

குறிப்பிட்ட தேவையை நிறைவேற்ற ஒரு புரோகிராம் எழுதப்படலாம். எடுத்துக்காட்டாக தேதியையும், நேரத்தையும் காட்ட ஒரு புரோகிராம் எழுதலாம். வேர்ட் பிராசசிங் வேலையை செய்ய ஒரு நீண்ட புரோகிராம் தேவைப்படலாம்.

நாம் இயக்குகிற எல்லா புரோகிராம்களும் கொண்ட தொகுப்பை சாப்ட்வேர் என்கிறோம். கம்ப்யூட்டருக்கு உயிரைக் கொடுப்பது சாப்ட்வேரின் ஒரு பிரிவான ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அப்ளிகேஷன் சாப்ட்வேர், சிஸ்டம் சாப்ட்வேர் என இரு வகையாக சாப்ட்வேரைப் பிரிப்பார்கள். சிஸ்டம் சாப்ட்வேரின் மறு பெயர்தான் ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். கம்ப்யூட்டருக்கும், அப்ளிகேஷன் சாப்ட்வேர்களுக்கும் இடையில் இருந்து ஒரு பாலமாக செயல்படுவது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும்.


கம்ப்யூட்டரில் பல பணிகளை மேலாண்மை (Management) செய்வது ஆப்பரேட்டிங் சிஸ்டமாகும். அவை என்ன வெனப் பாருங்கள்.
1) உள்ளீடு/வெளியீடு (Input/ Output)
2) நினைவக (Memory) மேலாண்மை
3) பணி (Task) மேலாண்மை
4) பைல் மேலாண்மை

கீபோர்டு, மானிட்டர், பிரின்டர் போன்ற ஹார்ட்வேர் உறுப்புக்களைக் கண்காணித்து அவற்றிடம் வேலை வாங்குவது ஆப்பரேட்டிங் சிஸ்டமே. எடுத்துக்காட்டாக ஒவ்வொரு தடவையும் கீபோர்டில் உள்ள கீகளை நீங்கள் அழுத்தும் பொழுது, ஆப்பரேட்டிங் சிஸ்டம் கண்காணித்து, அந்த கீகள் குறிக்கிற எழுத்துக்களை மானிட்டரில் வெளிப்படுத்துகிறது.

உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள நினைவகத்தின் அளவை அறிந்து அதைப் புத்திசாலித்தனமாக ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொள்ளும். நினைவகத்தில் தான் தங்குவதற்கான இடம், அப்ளிகேஷன் சாப்ட்வேர்கள் தங்குவதற்கான இடம், நீங்கள் டைப் செய்கிற விவரங்களை அமைக்கும் இடம், டிஸ்க்கிலுள்ள பைலை படிக்கும் பொழுது அதன் விவரங்களை வைக்க வேண்டிய இடம் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே தீர்மானிக்கிறது.

பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட அப்ளிகேஷன்களை இயக்க முடியும். Multitask என இதை அழைப்பார்கள். இவ்வாறு பல பணிகளில் ஈடுபடும்போது ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் இடையே பிணக்கு எதுவும் ஏற்படாமல், சிக்கலின்றி வழி நடத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட பணியை இரு சிறு கூறுகளாகப் பிரித்து இரண்டு சிபியுக்களிடம் (CPU) கொடுத்து வேலையை முடிக்கவும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குத் தெரியும்.

நீங்கள் உருவாக்கும் பைல்கள், மற்றும் அப்ளிகேஷன்களுக்கான பைல்கள் போன்றவற்றை ஆப்பரேட்டிங் சிஸ்டமே பராமரிக்கிறது. பைலைச் சேமிக்க, அழிக்க, வேறிடத்துக்கு நகர்த்த, பெயர் மாற்றம் செய்ய போன்ற வேலைகளை நீங்கள் கட்டளை தருகையில் ஆப்பரேட்டிங் சிஸ்டமே அவற்றை மேற்கொள் கிறது. 




ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வகைகள்


எவ்வளவு நபர்கள், எவ்வளவு பணிகள் ஒரு நேரத்தில் பயன்படுத்த மேற்கொள்ள முடியும் என்ற அடிப்படையில் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பிரிக்கிறார்கள். மூன்று வகைகள் நமக்கு கிடைக்கின்றன:
1) ஒரு பயனாளர் - ஒரு பணி 
(Single User Single task)
2) ஒரு பயனாளர் - பல பணி 
(Single User Multi task)
3) பல் பயனாளர் / பல பணி
(Multy User Multi task)

ஒரு நேரத்தில் ஒருவர் மட்டுமே, அதுவும் ஒரு பணியினை மட்டுமே ஒரு பயனாளர்/ஒரு பணி என்ற வகை ஆப்பரேட்டிங் சிஸ்டத் தில் செய்ய முடியும். அடுத்த பணியை செய்ய விரும்பினால், முதல் பணியை அவர் மூட வேண்டும். பழைய DOS ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். இப்போது இதனை இவ்வகையில் நாம் பயன்படுத்துவதில்லை 

ஒரு நேரத்தில் ஒருவரை மட்டுமே ஆனால் அவர் எவ்வளவு பணிகளை வேண்டுமானாலும் செய்யும்படி அனுமதிக்கிற ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை ஒரு பயனாளர்/பலபணி எனலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இதற்கான எடுத்துக்காட்டாகும். ஒரே நேரத்தில் பல பயனாளர்கள் நுழையும் படியும், அவரவர்கள் தங்களுக்கு வேண்டிய பல பணிகளை செய்யும்படியும் தயாரிக்கப்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பற்பயனாளர்-பலபணி எனலாம். யுனிக்ஸ், லினக்ஸ், விண்டோஸ் என்டி, விண்டோஸ் சர்வர் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுக்களாகும்.


விண்டோஸ் வேகமாக இயங்க


விண்டோஸ் சிஸ்டத்தினை பதித்து இயக்கத் தொடங்கியவுடன் சில காலத்திற்கு வேகமாக இயங்கும். நாட்கள் செல்லச் செல்ல அதன் வேகம் குறைய ஆரம்பிக்கும். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுதான். 


தேவையற்றவற்றை இன்ஸ்டால் செய்து வைப்பது, அழிக்க வேண்டிய பெரிய அளவிலான பைல்களை ஹார்ட் டிஸ்க்கில் தேங்கவிடுவது, பயன்படுத்தாத புரோகிராம்களை ஸ்டார்ட் அப் பட்டியலில் வைத்து, இயக்கிப் பின்னணியில் பயன்படுத்தாமல் வைத்திருப்பது என நாம் செய்திடும் பல கம்ப்யூட்டர் பாவச் செயல்களைச் செய்திடலாம். இன்னும் இது போல நாம் தவறான பல வழிகளை மேற்கொள்கிறோமா என்று சிந்தனை செய்தால், பட்டியல் நீளும். அதற்குப் பதிலாக நாம் செய்ய வேண்டியது என்ன என்று எண்ணி, அவற்றில் சில இங்கே பட்டியல் இடப்பட்டுள்ளன.

1. விண்டோஸ் விஸ்டா இயக்கத்தில் User Account Control என்ற புரோகிராம் தானாகவே தொடங்கி இயங்கும். இதனை நீக்குவது விண்டோஸ் இயக்கத்தின் வேகத்தை அதிகப்படுத்தும். இது பலருக்குத் தேவையற்ற புரோகிராம் ஆகும்.


2. இன்டர்நெட் தேடலில், உலாவில் அநேக பைல்கள் தற்காலிகமாக உருவாக்கப்பட்டு நம் ஹார்ட் டிஸ்க்கில் அடைந்திருக்கும். பிரவுசிங் ஹிஸ்டரி, டெம்பரரி டவுண்லோட் லிங்க்குகள், குக்கீஸ் போன்றவை உருவாகும். இவற்றை சி கிளீனர் (CCleaner) போன்ற புரோகிராம்கள் மூலம் நீக்கலாம். இது போன்ற புரோகிராமினை, கம்ப்யூட்டர் இயக்கம் தொடங்கும்போதோ, முடிக்கும் போதோ இயக்குவது நல்லது.


3. விண்டோஸ் பூட் ஆகும் நேரத்தைக் குறைக்க அதன் லோகோ வருவதைத் தவிர்க்கலாம். இதனை எப்படி மேற்கொள்வது என்பதனை http://www.techrecipes.com /rx/1353 /xpdisablexpbootlogo/ என்ற முகவரியில் உள்ள தளத்தில் அறியவும்.


4. குறிப்பிட்ட கால அவகாசத்தில் நீங்கள் பைல்களை பேக்கப் செய்வது வழக்கம் என்றால், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்பாட்டை முடக்கி வைக்கலாம். இதனால் வேகம் கூடுதலாகும். 


5. மை டாகுமெண்ட்ஸ் போல்டரை, சிஸ்டம் பூட் ஆகும் டிரைவில் இருந்து வேறு ஒரு டிரைவில் அமைக்கலாம்.

6. சில போர்ட்களை நாம் பயன்படுத்தாமலே வைத்திருப்போம். இவற்றின் இயக்கத்தை நிறுத்தி வைக்கலாம்.

7. இன்டர்நெட் பிரவுசிங் செய்கையில் வெப் ஆக்சிலரேட்டர்களைப் பயன்படுத்தவும். இவை நீங்கள் பார்க்க இருக்கும் தளங்களை எடுத்து கேஷ் மெமரியில் வைத்து உங்கள் நேரத்தை மிச்சப்படுத்தி, செயல்பாட்டினை வேகப்படுத்தும்.


8. உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்பட்டு மாதங்கள் அல்லது ஆண்டுகள் பல ஆகிவிட்டதா? சின்ன சின்ன வேகமாகச் செயல்படும் பாகங்களை, பழையனவற்றின் இடத்தில் இணைப்பதன் மூலம் கம்ப்யூட்டரின் செயல்பாட்டைத் துரிதப்படுத்தலாம்.


9. விஸ்டாவிலும், எக்ஸ்பியிலும் TeraCopy என்ற புரோகிராமைப் பயன்படுத்தி காப்பி செயல்பாட்டை மேற்கொண்டால், அதில் வேகம் கிடைக்கும். இது இலவசமாய் இணையத்தில் கிடைக்கிறது.


10. எக்ஸ்பியில் 512 எம்பிக்கும் குறைவாகவும், விஸ்டாவில் 1 ஜிபிக்கும் குறைவாகவும் ராம் மெமரி பயன்படுத்துவது பாவம். இதனை அதிகரிக்கலாமே!


11. சிஸ்டம் ப்ராபர்ட்டீஸ் விண்டோ பெற்று, பெர்பார்மன்ஸ் டேப் கிளிக் செய்து அதில் “Adjust for best performance” தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதனை உறுதி செய்திடவும்.


12. எப்போதாவது விண்டோஸ் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்யப் போகிறீர்களா? அப்படியானால் உங்கள் ஹார்ட் ட்ரைவ் சரியாக பார்ட்டிஷன் செய்யப்பட்டிருப்பதனை உறுதி செய்திடுங்கள். டிஸ்க்கில் உள்ள பைல்களை அழிக்காமலேயே, ஹார்ட் ட்ரைவ் பார்ட்டிஷன் செய்யக் கூடியபுரோகிராம்கள் நிறைய இணையத்தில் கிடைக்கின்றன.


13. விண்டோஸ் இயக்கத்திற்கான ட்ரைவர் புரோகிராம்கள் அனைத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்திடவும். 


14. கண்ட்ரோல் பேனலைத் திறந்து அதில் Add or Remove என்ற பிரிவைப் பார்த்துப் பயன்படுத்தாத புரோகிராம்களை நீக்கவும்.


15.குறிப்பிட்ட கால இடைவெளியில் உங்கள் மவுஸ், கீ போர்டு, சிபியுவில் உள்ள சிறிய மின்விசிறிகள் ஆகியவற்றில் உள்ள தூசு நீக்கிச் சுத்தம் செய்திடவும்.


16. உங்கள் ஹார்ட் டிஸ்க் 7200 ஆர்.பி.எம். சுழற்சிக்கும் குறைவான வேகத்தில் செயல்படுவதாக இருந்தால், உடனே குறைந்தது அந்த வேகத்தில் சுழலும் ஹார்ட் டிஸ்க்குக்கு மாறவும்.


17. அவ்வப்போது ஆண்ட்டி வைரஸ் கொண்டு உங்கள் டிஸ்க் முழுவதையும் சோதனை செய்திடவும். ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து வைத்து இயக்க விருப்பமில்லை எனில், ஆன்லைனில் கிடைக்கும் இலவச புரோகிராம்களைப் பயன்படுத்தவும்.


18. இன்டர்நெட் பிரவுசர் மற்றும் விண்டோஸ் டாஸ்க்பாரில் தேவையற்ற டூல்பார்களை நீக்கவும். விஸ்டாவில் சைட் பாரினை பயன்படுத்தவில்லை என்றால் நீக்கலாம். இது தேவையற்ற இடத்தையும், சிபியுவின் செயல்பாட்டையும் எடுத்துக் கொள்கிறது.


19. விண்டோஸ் மற்றும் பிற புரோகிராம்களுக்கான ஷார்ட் கட் கீகளைத் தெரிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது. அல்லது நீங்களே உங்கள் ஷார்ட் கட் கீகளை உருவாக்கிப் பயன்படுத்தலாம்.

20. ஸ்கேன்டிஸ்க் அல்லது செக்டிஸ்க் பயன்படுத்தி உங்கள் ஹார்ட் டிரைவில் பேட் செக்டார் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். 

21. உங்கள் கம்ப்யூட்டரில்  சிடி ராம் டிரைவ், யு.எஸ்.பி. போர்ட், ஐ.ஆர். போர்ட், பயர்வயர் போன்றவை தரப்பட்டுள்ளன. இவற்றில் பலவற்றை (எ.கா. பிளாப்பி ட்ரைவ், ஐ.ஆர். போர்ட், பயர்வயர்) நாம் பயன்படுத்துவதே இல்லை. உங்கள் பயாஸ் (bios) செட்டிங்ஸ் சென்று, பயன்படுத்தாதவற்றின் இயக்கத்தை நிறுத்தலாம்; இதனால் பூட் ஆகும்போது இவை சார்ந்த பைல்கள் லோட் ஆகாமல் இருக்கும். மேலும் இவற்றிற்கு செல்லும் மின்சக்தி மிச்சமாகும்.


22. சிலர் ரீசன்ட் டாகுமெண்ட் லிஸ்ட்டைப் பயன்படுத்த மாட்டார்கள். அவர்கள் இந்த வசதியை எடுத்துவிடலாம். ஏனென்றால் பெரிய லிஸ்ட்டில் இந்த பைல்கள் இடம் பெறுவது கம்ப்யூட்டர் இயக்கத்தினை மந்தப்படுத்தும்.


23.புரோகிராம்களை அன் இன்ஸ்டால் செய்திடுகையில் ரெவோ அன் இன்ஸ்டாலர் (Revo Uninstaller) போன்ற புரோகிராம்களைப் பயன்படுத்தவும். இவை அந்த புரோகிராம் சார்ந்த அனைத்து பைல்களையும் நீக்கிவிடும்.


24. தற்போது பயன்படுத்தாத பிரிண்டர்கள், மொபைல் போன் மற்றும் எம்பி3 பிளேயர்களுக்கான டிரைவர்களை நீக்கவும். 

25. உங்கள் கம்ப்யூட்டரில் விஸ்டா மிகவும் மெதுவாக இயங்குகிறதா? எந்தவிதத் தயக்கமும் இன்றி   Windows 7க்கு மாறவும். அடுப்பு எதாக இருந்தால் என்ன, சோறு சீக்கிரம் வெந்தால் சரிதானே! லினக்ஸ் அல்லது மேக் சிஸ்டத்திற்கும் கூட மாறலாம்.


இறுதியாக ஒரு பரிந்துரை. எரிச்சல் அடையும் அளவிற்கு, கம்ப்யூட்டர் மிக மிக மெதுவாக இயங்குகிறதா? 


இன்னொரு வழியும் உள்ளது. புதிய கம்ப்யூட்டர் ஒன்று வாங்கி, அனைத்துமே புதியதாக இன்ஸ்டால் செய்து பயன்படுத்துங்களேன்.
(தினமலர் முதல் பக்கம் » வாராந்திர பகுதி » கம்ப்யூட்டர் மலர் செய்தி

Monday, December 3, 2012

கொழுப்பைக் குறைக்கும் வழி



கொழுப்பு: 



ன்றைய நவீன வாழ்க்கை சூழலில், பெரும்பாலானோர், வாய்க்கு ருசியாக இருக்கிறது என்று 'வறுத்தது, பொரித்தது’ போன்ற எண்ணெய் உணவுகளை ஒரு கட்டு கட்டிவிடுகின்றனர். இதனால் உடம்பில் கொழுப்பு அதிகரித்து, எடை கூடி, நடக்க முடியாமல் திண்டாடுகின்றனர். இன்று எடையை குறைப்பதற்காக பலர் நடைபயிற்சி மேற்கொள்வதை கண்கூடாக பார்க்கமுடிகிறது.

இப்படி நம் உடலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி, பல்வேறு நோய்களின் வாசஸ்தலமாக இருப்பது 'கொலஸ்ட்ரால்’ என்கிற கெட்டக் கொழுப்புதான்.

*நீங்கள் ஒரு கார் வைத்துள்ளீர்கள். அதில் தினம் 2 லிட்டர் பெட்ரோல் ஊற்றுகிறீர்கள். தினம் 1 லிட்டர் பெட்ரோலை வண்டி ஓட்டுவதன் மூலம் செலவு செய்கிறீர்கள். ஆகத்  தினம் 1 லிட்டர் பெட்ரோல் மீதி. கார் என்றால் பெட்ரோல் டாங்கின் கொள்ளளவு போக மீதமுள்ள பெட்ரோலை ஏற்காமல் வெளியே தள்ளிவிடும். மனித உடலுக்கு அந்தச்  சக்தி இல்லை. மீதமாகும் எரிபொருளை (உணவை எரிப்பதால் கிடைக்கும் எனெர்ஜி) கொழுப்பாக மாற்றி உடலில் சேர்த்து வைக்கும்.

இப்படி உடலில் சேரும் கொழுப்பு நாளாவட்டத்தில் நம் ரத்தக் குழாய்களிலும் சேர்கிறது. அப்போது ரத்தம் உடலுக்குள் எளிதாகச்  சென்று வருவது தடுக்கப்பட்டு இதயத்துக்கு ரத்தம் போகாமல் ஹார்ட் அட்டாக் வந்து மரணம் சம்பவிக்கிறது.

இப்படிச்  சேரும் கொழுப்பையே கொலஸ்டிரால் என்கிறோம். இதைக்  கரைக்க இரு வழிகள் உள்ளன.

மீண்டும் கார், பெட்ரோல் உதாரணத்தை நினைவில் கொள்வோம். பெட்ரோல் டாங்கில் அதிகம் பெட்ரோல் இருந்தால் அதை எப்படிச்  செலவு செய்வோம்? கார் ஓட்டி, அதாவது உடல்பயிற்சி.

இன்னொரு வழி குறைவாக உண்பது. அதாவது நாம் தினம் செலவு செய்யும் கலோரியை விடக்  குறைவான கலோரிகளை உண்டால் உடல் தான் சேர்த்து வைத்த கொழுப்பிலிருந்து சக்தியை எடுத்துச் செலவு செய்யும். அதாவது கொழுப்பை எப்படிச்  சேர்த்து வைத்ததோ அதே போல் எரித்துவிடும்.

நல்ல கொழுப்பு என்றால் என்ன? அதாவது ஒருவகைக் கொழுப்பு உடலில் ஜீரணத்துக்கு உதவுகிறது. இந்த வகைக் கொழுப்பு சோயா பீன் ஆயில், சூரியகாந்தி எண்ணெய், சஃபோலா ஆயில் போன்றவற்றில் காணப்படுகிறது. பாதாம், பிஸ்தா, வால்நட் போன்ற கொட்டைகளில் காணப்படுகிறது.

ஆக நாம் செய்யவேண்டியது

1) கெட்ட கொழுப்பு நிறைந்து காணப்படும் பாம் ஆயில், கடலை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். இதற்குப் பதில் சூரியகாந்தி எண்ணெய், சோயா ஆயில் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதனால் உடலில் கெட்ட கொழுப்பு சேர்வது ஓரளவு குறையும். நல்ல கொலஸ்டிரால் ஏறும்

2) முட்டை மஞ்சள் கருவைத்  தவிர்க்க வேண்டும். வெள்ளைக் கருவை உண்ணலாம்.
சிகப்பு மாமிசம் எனச்  சொல்லப்படும் ஆட்டுக்கறி, பன்றிக்கறி, மாட்டுக்கறி ஆகியவற்றைத்  தவிர்க்கவேண்டும்.

அதற்குப் பதில் வெள்ளை மாமிசம் எனச் சொல்லப்படும் சிக்கன், மீன் ஆகியவற்றை உண்ணலாம். சிக்கனிலும் தோலை நீக்கிவிட்டு மாமிசத்தைத் தான் பயன்படுத்த வேண்டும்

3) தினமும் உடல்பயிற்சி செய்தால் நல்ல கொலஸ்டிரால் தானாக ஏறும். தினமும் குறைந்தது மூன்று மைல் (ஐந்து கிமி) நடைப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

4) உணவின் அளவைக் குறைக்க வேண்டும். சூரியகாந்தி எண்ணெயில் பொறித்த வடைதானே என அதில் புகுந்து விளையாட கூடாது. எண்ணெய் பலகாரம், இனிப்புகள் ஆகியவை முழுக்க ஒதுக்கப்படவேண்டும்.

மிகப் போர் அடித்தால் வாரம் ஒரு நாள் ஒரு தடவை வடை, பஜ்ஜி போன்றவற்றை மிதமான அளவில் உண்டுகொள்ளலாம்.

உணவில் காய்கறி, பழம் ஆகியவை அதிக  இடம்பெற வேண்டும் (உருளைக் கிழங்கும்,
வாழைப்பழமும் கூடாது. அதில் கலோரிகள் அதிகம். இவற்றை மிதமாக உண்ணலாம்)

உடல் பயிற்சி செய்ய முடியாது என சொல்பவர்கள் கூட வாழ்வில் சிறு, சிறு மாற்றங்களை கொண்டு வந்தால் கணிசமான அளவில் முன்னேற்றம் காணலாம். உதாரணமாக

1) காபியில் தினம் 3 ஸ்பூன் சர்க்கரை போட்டு தினம் மூன்று காபி குடிக்கிறோம் என வைத்துக் கொள்வோம். அதில் 3 ஸ்பூனுக்குப் பதில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை போட்டுக் கொண்டால் சுவையில் பெரிதாக வித்தியாசம் இருக்காது. ஆனால் ஆறு மாதத்தில் அதனால் சுமார் அரை கிலோ எடை குறையும்.

2) 8% கொழுப்பு இருக்கும் பாலை வாங்குவதுக்குப் பதில் 2% கொழுப்பு உள்ள பாலை வாங்கினால் பெரிதாகச் சுவையில் வித்தியாசம் இருக்காது. ஆனால் தினம் ஒரு கப் பால் என வைத்துகொன்டால் அதனால் இரண்டு மாதத்தில் ஒரு கிலோ எடை குறையும்.

3) ஆபிசில் லிப்டைப் பயன்படுத்துவதுக்குப் பதில் படியைப் பயன்படுத்தலாம். கொஞ்சம் சிரமம் ஆனால் முடியாதது அல்ல. தினம் 3 நிமிடம் படியில் ஏறி இறங்கினீர்கள் என வைத்துப் கொன்டால் ஒரு வருடத்தில் சுமார் ஒரு கிலோ எடை குறையும்.

ஆக இப்படிச் சின்னச்  சின்ன மாற்றங்கள் கொண்டுவருவதன் மூலம் மட்டுமே ஒரே வருடத்தில் நாலைந்து கிலோ எடை குறையும்.

40 நிமிட உடல்பயிற்சி


உடல்பயிற்சி செய்கையில் உடலில் நிகழும் மாற்றங்கள்

குறைந்தது 40 நிமிடம் நடந்தால் என்ன விளைவுகள் உடலில் ஏற்படுகின்றன என்பது பற்றிய விளக்கம்

மூளை:


நாம் உடல்பயிற்சி செய்யத் துவங்கியவுடன் மூளை உடலின் அனைத்துப்பாகங்களுக்கும் அலெர்ட் சிக்னலை அனுப்புகிறது. உடனே அதிக  ஆக்சிஜன் சுவாசிக்கத் துவங்குகிறோம். இதயத் துடிப்பு விரைவடைகிறது. வியர்க்கத்துவங்கியவுடன் மூளை உடலில் ஏற்படும் களைப்பைப் போக்க என்டார்பின்களையும்,டொபொமைன்களையும்  ரிலீஸ் செய்கிறது. இது மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் ஹேப்பி கெமிக்கல். நமக்கு மகிழ்ச்சியான மூடை வரவழைத்து உடலுக்குப் புத்துணர்ச்சி அளிக்கிறது

இதயம்


உடல்பயிற்சி செய்யத் துவங்கிய அடுத்த வினாடியே நம் இதயம் விரைவாகத் துடிக்கத் துவங்குகிறது. ஒவ்வொரு துடிப்பிலும் அதிக ரத்தம் பம்ப் செய்யபடுகிறது.மிக அதிக வேகத்தில் ஓடினால் நிமிடத்துக்கு 160 - 180 வரை இதயத் துடிப்பு உயர்கிறது (சராசரி 60 - 80 நிமிடத்துக்கு). உடல்பயிற்சி செய்கையில் இதயத்துடிப்பு உயர்வதால் நார்மலாக இருக்கையில் துடிக்க வேண்டிய விகிதம் குறைந்து இதயத்துக்கு நல்ல ஓய்வு கிடைக்கிறது.

நுரையீரல்


நடக்கையில்/ ஓடுகையில் நுரையீரல் அதிகமான வேகத்தில் மூச்சு வாங்குகிறது.இதனால் உடலுக்கு அதிக  ஆக்சிஜன் கிடைக்கிறது. உடலுக்கு எத்தனை அதிகமாக ஆக்சிஜன் கிடைக்கிறகோ அத்தனை அதிக அளவில் உடலில் இருக்கும் அசுத்தப் பொருளான கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றப்படும்

கொழுப்பு செல்கள்

நீன்ட நேரம் மெதுவாக நடந்தால் உடல் கார்போஹைட்ரே(ட்ஸை எரிப்பதை நிறுத்தி உடலில் உள் கொழுப்பு சத்தை எரிக்க துவங்குகிறது. 

உடல்பயிற்சி செய்யத் துவங்கிய முதல் 20 நிமிடம் கார்போஹைட்ரேட்டுகளை  உடல் எரிக்கும். அதன் பின் 21 ஆவது நிமிடத்தில் இருந்து நீங்கள் உடல்பயிற்சி செய்யும் ஒவ்வொரு வினாடியும் உடல் கொழுப்பைத் தான் எரிக்கும். கொழுப்பை எரிக்க எரிபொருளானஆக்சிஜன் அதிகம் தேவை. அதனால் ஒரு அரைமணிநேரம் நடந்தபின்னர் அதிகம் மூச்சு வாங்குவதை உணரலாம். அது உங்கள் உடல் கொழுப்பை எரிக்கிறது என்பதற்கான அறிகுறி. 

அதனால் 20 நிமிடத்தைத்  தாண்டியபின்னர் நிறுத்தாமல் எத்தனை நேரம் தொடர்ந்து நடக்க முடியுமோ அதைத் தொடருங்கள்.*


(*நன்றி செல்வன் )

Wednesday, November 21, 2012

கம்ப்யூட்டருக்கு புதியவரா? - கம்ப்யூட்டர் கிராஷ்


பல வேளைகளில் திடீரென கம்ப்யூட்டர் கிராஷ் ஆகி நீல வண்ணத்தில் திரை மாறிவிடும். அல்லது அப்படியே திரைக் காட்சி முடங்கிப் போய்விடும். சில வேளைகளில் திரையில் Fatal error: the system has become unstable or is busy,” it says. “Enter to return to Windows or press Control Alt Delete to restart your computer. If you do this you will lose any unsaved information in all open applications.” என்ற செய்தி கிடைக்கும். இதைத்தான் Blue Screen of Death என்று கம்ப்யூட்டர் மொழியில் சொல்வார்கள். ஏன் இவ்வாறு ஏற்படுகிறது என்று இங்கு காணலாம். 


1. ஹார்ட்வேர் பிரச்னை:

கம்ப்யூட்டரில் பல பாகங்கள் ஒன்றிணைந்து இயங்குகின்றன. சில வேளைகளில் இவற்றுக்குள் பிரச்னை வந்தால் இயங்குவது நின்று போகும். ஒவ்வொரு சாதனமும் ஒரு வழியை மேற்கொண்டு அதன் மூலம் தன் இயக்கத்தை மேற்கொள்ளும். பொதுவாக ஒரு கம்ப்யூட்டரில் இத்தகைய வழிகள் 16 குறைந்த பட்சம் இருக்கும். இதில் ஒரே வழியை இரு சாதனங்கள் (பிரிண்டர், கீ போர்டு/மவுஸ்) எடுத்துக் கொள்ளும்போது இயக்கம் நின்று போகும். இவ்வாறு ஏற்படுகையில் Start>Settings> Control Panel> System> Device Manager எனச் சென்று பார்த்தால்,பிரச்னை ஏற்பட்ட சாதனத்தின் பெயர் முன்னால் ஒரு மஞ்சள் நிற ஆச்சரியக் குறி தோன்றும். டிவைஸ் மேனேஜரில், கம்ப்யூட்டர் என்பதில் கிளிக் செய்து பார்த்தால், இந்த சேனல் வழிகளுக்கான ஐ.ஆர்.க்யூ எண் காட்டப்படும். ஒரே எண் இருமுறை இருப்பின் பிரச்னை அங்குதான் உள்ளது என்று பொருள். இதற்குத் தீர்வு என்ன? பிரச்னைக்குரிய சாதனத்தை அன் இன்ஸ்டால் செய்து மீண்டும் இன்ஸ்டால் செய்தால் போதும் 

2. ராம் மெமரி சிப்ஸ்:

ராம் மெமரியை உயர்த்துவதற்காகப் புதிய ராம் சிப் ஒன்றை இணைத்திருப்போம். ஆனால் ஒன்றுக்கொன்று வேறுபாடான வேகம் உள்ளவையாக அவை இருக்கலாம். அவற்றிற்கிடையே இணைந்து செல்லும் நிலை ஏற்படாத போது Fatal Exception Error ஏற்படலாம். இதனை கம்ப்யூட்டர் பாகங்களின் இயக்கம் தெரிந்தவர்கள் மூலம், பயாஸ் செட்டிங்ஸ் திறந்து, ராம் தீச்டிt ண்tச்tஞு நிலையைச் சற்று உயர்த்தலாம். அல்லது ஒரே மாதிரியான வேகத்தில் இயங்கும் சிப்களை அமைக்கலாம். 

3. ஹார்ட் டிஸ்க் டிரைவ்:

பயன்படுத்தத் தொடங்கிய சில வாரங்களில் ஹார்ட் டிஸ்க்கின் ஒழுங்கு நிலை கலையத் தொடங்கும். தேவையற்ற தற்காலிக பைல்கள் தேங்கும். பைல்கள் சிதறியபடி சேமிக்கப்படும். இதனால் இயக்க வேகத்திற்கு ஹார்ட் டிஸ்க் இணையாக இயங்க முடியாமல் போகும். அப்போது கிராஷ் ஆக வாய்ப்புண்டு. எனவே அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு டிபிராக் (Defrag)செய்திட வேண்டும். சி டிரைவில் தங்கும் தேவையற்ற பைல்களை அதற்கான புரோகிராம்கள் கொண்டு நீக்கலாம்.

4. வீடியோ கார்ட்:

சில வேளைகளில் கிராஷ் ஆகும் போது Fatal OE exceptions and VXD errors என்ற செய்தி கிடைக்கும். இது வீடியோ கார்டினால் ஏற்படுவது. இதனைத் தவிர்க்க வீடியோ டிஸ்பிளேயின் ரெசல்யூசனைக் குறைக்கவும். Start>Settings>Control Panel> Display Settings எனச் சென்று ஸ்கிரீன் ஏரியா பாரினை இடது மூலையில் நிறுத்தவும். அதே போல கலர் செட்டிங்ஸ் சென்று 16 பிட் என்ற அளவில் அமைக்கவும்.

5. வைரஸ்:

பெரும்பாலான கம்ப்யூட்டர் கிராஷ்களுக்கு வைரஸ்களே காரணம். சரியான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றை நிறுவி, அவ்வப்போது அதனை அப்டேட் செய்வது மட்டுமே இதனைத் தடுக்கும். பல வைரஸ்கள் பூட் செக்டாரைக் கெடுத்து வைக்கும். இதனால் கம்ப்யூட்டரை இயக்கவே முடியாது. எனவே இது போன்ற நிலையில் கை கொடுக்க விண்டோஸ் ஸ்டார்ட் அப் டிஸ்க் ஒன்றை உருவாக்கி கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். 

6. பிரிண்டர்:

பல வேளைகளில் கம்ப்யூட்டர்கள் பிரிண்ட் எடுக்கையில் கிராஷ் ஆவதை நீங்கள் கவனித்திருக்கலாம். இதற்குக் காரணம் பிரிண்டர்களில் மிகவும் குறைந்த அளவில் பபர் மெமரி இருப்பதே ஆகும். மேலும் கம்ப்யூட்டரின் சிபியு சக்தியை பிரிண்டர்கள் சற்று அதிகமாகவே பயன்படுத்தும். எனவே பல வேலைகளுடன் பிரிண்டிங் வேலையை மேற்கொள்கையில், அல்லது அதிகமான அளவில் பிரிண்டருக்கு டேட்டாவினை அனுப்புகையில் கிராஷ் ஏற்படும். நாம் சாதாரணமாகக் காணாத கேரக்டர்களை பிரிண்டர் அச்சிட்டால் இந்த பிரச்னை தலை தூக்குகிறது என்று பொருள். உடனே பிரிண்டருக்குச் செல்லும் மின்சாரத்தை 10 விநாடிகளுக்கு நிறுத்திப் பின் மீண்டும் இயக்கவும். 

7. சாப்ட்வேர்:

முழுமையாக இல்லாமல் அல்லது மோசமாக இன்ஸ்டால் செய்யப்பட்ட சாப்ட்வேர் தொகுப்புகளால், கம்ப்யூட்டர் கிராஷ் ஆகலாம். இவற்றைச் சரியாக அன் இன்ஸ்டால் செய்திட வேண்டும். இல்லையேல் இவை தொடர்பான வரிகள், ரெஜிஸ்ட்ரியில் இருந்து கொண்டு, இந்த சாப்ட்வேரினை இயக்குகையில் கம்ப்யூட்டரை கிராஷ் ஆகும் நிலைக்குக் கொண்டுவரலாம். ரெஜிஸ்ட்ரியைச் சுத்தம் செய்திடவென வடிவமைக்கப்பட்ட புரோகிராம்களைக் கொண்டு அதனைச் சரி செய்திட வேண்டும். இல்லையேல் மீண்டும் விண்டோஸ் இயக்கத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

8. அதிக வெப்பம்:

இப்போது வருகின்ற சிபியுக்கள் மீது சிறிய மின் விசிறிகள் பொருத்தப்பட்டு சிபியு இயக்கத்தின் போது உருவாகும் வெப்பம் வெளிக்கடத்தப்படுகிறது. சிபியு அதிக சூடானாலும், அதிக குளிர்ச்சியினால் பாதிக்கப்பட்டாலும், கெர்னல் எர்ரர் (Kernel Error) என்று ஒரு பிரச்னை ஏற்படும். பொதுவாக எந்த வேகத்தில் ஒரு சிபியு இயங்க வேண்டுமோ அதனைக் காட்டிலும் அதிக வேகத்தில் இயங்கு வகையில், சிபியு செட் செய்யப்பட்டிருந்தாலும் அதிக வெப்ப பிரச்னை ஏற்படும். எனவே சிபியு வின் வேகத்தினை பயாஸ் செட்டிங்ஸ் சென்று குறைக்க வேண்டும்.

9. மின் ஓட்டம்:

கம்ப்யூட்டருக்குச் செல்லும் மின் ஓட்டத்தினைச் சீராகத் தரும  சாதனங்களைக் கொண்டு தராவிட்டால், கிராஷ் ஆகும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. எனவே சரியான யு.பி.எஸ். மற்றும் சர்ஜ் புரடக்டர் கொண்டு இதனைத் தவிர்க்கலாம்.

நன்றி :தினமலர் கம்ப்யூட்டர் மலர் செய்தி

Thursday, November 15, 2012

உங்கள் மனதை சந்தோசமாக வைத்து இருப்பது எப்படி?







ஒரு காரியத்தில் ஈடுபடும்போது அந்தக் காரியத்தில் வெற்றி கிட்டுவது போல் நினைக்க வேண்டும். வெற்றி அடைவது போல் உங்கள் மனத்திரையில் காண வேண்டும். 

  வெற்றி அடைவதைப் போன்று மனதில் உருவகப்படுத்திப் பார்க்கும்போது தோல்வி  அடைந்துவிடுவோம் என்ற எண்ணங்கள் உருவாகுவதற்கு அங்கு வாய்ப்பு இல்லை. 

வெற்றியடைந்து விடுவோம் என்று உங்கள் மனத்தால் நினைக்கும் போது அந்தக் காரியம் வெற்றி அடைந்து விடுவதர்க்குண்டான அணைத்து வழிகளையும் உங்கள் மனது ஏற்படுத்திக் கொடுத்து விடும். 

உங்கள் மனதைச் சந்தோசமாக வைத்திருப்பதற்கு இன்னும் நிறைய வழிகள் உள்ளன.

ஒரு நாளைத் துவக்கும் போது உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளை மட்டும் நிரப்பி வையுங்கள்.

அப்படிச் செய்யும் போது அந்த நாள் முழுவதும் மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். அந்த உற்சாகம் அன்று முழுவதும் நீங்கள் ஈடுபடும் காரியங்களில் வெற்றியடைய உதவுகிறது.

மற்றவர்களிடம் பேசும்போது சந்தோசமான ஆக்க பூர்வமான (positive speech) விசயங்களை மட்டும் பேசுங்கள்.

அந்த இடத்தில ஒரு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்குவதற்குக் காரணமாக இருங்கள். அப்போது மற்றவர்களால் நீங்கள் வெகு சுலபமாகக் கவரப்பட்டுவிடுவீர்கள்.

உங்கள் மனத்திரையில் உங்கள் வாழ்க்கையில் நடந்த மகிழ்ச்சிகரமான நிகழ்ச்சிகளைப் படங்களாக மாட்டி வையுங்கள். அவை தந்த மகிழ்ச்சிகரமான நினைவுகளை அடிக்கடி நினைவு கூர்ந்து உங்கள் காரியங்களில் செயல் படுங்கள். வெற்றியும் கிட்டும். மன அமைதியும் கிட்டும்.

உங்களுடைய அன்றாட வேலைகளைப் போல மனதில் அடிக்கடி சந்தோசமான நிகழ்ச்சிகளை நினைப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

அடிக்கடி உங்கள் மனதில் சந்தோசமான நிகழ்ச்சிகளைச் செலுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு மன அமைதியும் கிட்டும் அதன் விளைவாக உங்களுடைய காரியத்தில் வெற்றியும் கிட்டும்.  

ஒரு காரியம் நடக்காது அல்லது தோல்விதான் என்ற நினைவு வரும்போது உடனடியாக அதற்கு மாற்று மருந்தாக நாம் வெற்றியடையப் போகிறோம் நமக்குச் சாதகமாக  அந்தக் காரியம் நடக்கும் என்று எண்ணுங்கள்.

உடனே அந்தத் தோல்வி எண்ணங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் விடும். உங்கள் காரியமும் நிச்சயமாக வெற்றி அடையும்.

எந்தச் சக்தியாலும் உங்களைத் தோல்வி அடையச் செய்ய முடியாது என்று அடிக்கடி எண்ணிக் கொண்டே இருங்கள். உங்களையும் அறியாது உங்கள் மனது எப்போதும் சந்தோசமாகவே இருக்கும்.

என்னதான் நம்முடைய மனதைச் சந்தோசமாக வைத்துகொள்ள நினைத்தாலும் மனம் என்பது ஒரு மாறும் குணமுடைய மனித அங்கமாகும். அதனால்தான் மனம் ஒரு குரங்கு என்று கூறினார்கள். ஒரு இடத்தில் நிலையாக இருக்காது. 


தியானம் என்னும் அற்புதக் கலையினால் நம்முடைய மனதை நிலையான ஒரு இடத்தில நிறுத்தி மனதை எப்போதும் சந்தோசமாக வைத்திருக்கலாம்  

(இணையத்தில் படித்து ரசித்தது )

Friday, October 19, 2012

தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்குவதே தீர்வு!



வறிழைத்த அரசனொருவனைச் சினங்கொண்ட முனிவர் ஒருவர்,''நீ நாளையே பன்றியாகிச்  
சாக்கடையருகே திரியக்கடவாய்'' என்று சபித்துவிட்டார். பன்றியாக மாறிவிடும் கேவலத்தை  விரும்பாத அரசன் தன் மகனை அழைத்து, ''நான்நாளை பன்றியாக மாறிய மறுகணமே என்னை வாளால் வெட்டிக்கொன்றுவிடு!'' என்று கேட்டுக்கொண்டான். 

எதிர்பார்த்தபடி மறுநாள் காலை அரசன் பன்றியானான். மகன் சோகத்துடன் பன்றியான தன் தந்தையை வெட்ட வாளை வீசும்போது,'' மகனே! பொறு! இன்னும் ஒருமாதம் பன்றிவாழ்க்கை எப்படியிருக்கிறது என்று பார்த்துவிட்டுச் சாகிறேன். அடுத்த மாதம் இதே நாளில் என்னைக்கொன்று விடு'' என்றான். 

பன்றி வாழ்க்கையில் அவன் ஒரு பெண் துணையைத்தேடிக்கொண்டான். பெண் பன்றி கர்ப்பமானது. ஒருமாதம் கழித்து மகன் மீண்டும் தந்தையைக் கொல்ல வாளுடன் வந்தபோது,'' மகனே இப்போது நான் இறந்தால் கர்ப்பமாகியுள்ள என்  மனைவி ஆதரவற்றுவிடுவாள். குட்டிகள் பிறந்த பின் அடுத்த மாதம் இதே நாளில் என்னைக் கொன்றுபோடு'' என்றான். 

மீண்டும் ஒருமாதம் கழித்துமகன் தந்தை தனக்கிட்ட கட்டளைப்படி தந்தையையின் அருவருப்பான வாழ்வை முடிவு கட்ட வந்தபோது,'' மகனே இந்தக் கேவலமான  வாழ்க்கை எனக்கு இப்போது பழகிவிட்டது. சாக்கடை ஓரத்தில் சமாளித்து வாழவும் பழகிவிட்டேன். மனைவிகுட்டிகள் என்று பந்தமும் பொறுப்பும் எனக்கு இந்த வாழ்வையும் அர்த்தமுள்ளதாக்கிவிட்டது. இனி இப்படியே இருந்துவிடுகிறேன். என்னை இனி இப்படியே வாழவிடு. எந்தத் துன்பம் வந்தாலும் பழகிக்கொண்டு நீயும் வாழக்கற்றுக்கொண்டால், உன் வாழ்வும் மகிழ்வாக இருக்கும்  '' என்று மகனுக்கு அறிவுறுத்தினான்.

நமக்கு வரும் பிரச்சினைகளைத் தீர்க்க 3 வழிகள் இருக்கின்றன. 

  • முதல் வழி பிரச்சினைகளைத் தீர்க்க வழி தேடுவது
  • அடுத்தது,பிரச்சினைகளை ஒதுக்கிவிட்டுச் செல்வது
  • இறுதிவழி பிரச்சினைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வது. பல நேரங்களில் இந்த இறுதிவழிக்கே நாம் தள்ளப்படுகிறோம். பன்றியான அரசன் மாதிரி பிரச்சினையோடு வாழ்வதே தீர்வாகிறது.


பிரச்சினைகளோடு மோதிப்பார்த்துத் தீர்வு காணும் முதல் வழிதான் சிறந்தது என்பதில் ஐயமில்லை. எனினும் எல்லாப் பிரச்சினைகளிலும் அது நடைமுறையில் சாத்தியமாக இருப்பதில்லையே! மூப்புபிணி,சாவுசூழல் முதலியவற்றைத் தடுப்பது இன்றுவரை முற்றிலும் சாத்தியமாகவில்லையே!

பிறவியிலோவிபத்திலோ உறுப்புகளை இழந்தவர்அன்பான உறவுகளைப் பறிகொடுத்தவர்கடைசிமுறையீடும் தோற்றுதூக்குமேடை ஏறவேண்டியவர்புற்றுநோயின் இறுதிக் கட்டத்தில் வாழ்பவர்-  இவர்கள் மட்டுமன்றிஏற்றே ஆகவேண்டிய கசப்பான பணியை ஆற்றவேண்டிய  சூழலில் உள்ளவர்மனமாறுபாடுடைய மனித உறவுகளுடன்  வாழ்தே தீரவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர் - இவர்களெல்லாம் பிரச்சினைகளோடு வாழ்ந்தே தீரவேண்டியவர்கள்..

''உனக்கு ஏழரை நாட்டுச்சனி. ஆனால் ஓராண்டுக்கு மேல் பிரச்சினையில்லை'' என்றான் சோதிடன். பாதிக்கப்பட்டவன் எப்படியெனக்கேட்டதற்கு,'' ஓராண்டில் கஷ்டங்கள் பழகிவிடும். மீதி ஆண்டுகளில் துன்பம் தெரியாது'' என்றானாம். துன்பங்கள் பழகிப்போனால் அதன் வேதனை கரைந்துவிடும் என்பதே உண்மை.

தணிப்பறியாத் துன்பங்களைக் கண்டு அஞ்சிஓடாமல் அதனையே ஏற்றுதம்வசப்படுத்தி வாழ்ந்தவர்கள்அதன் பலனாக மாபெரும் சாதனைகளைப் படைத்திருக்கிறார்கள்.

1. 43 வயதில் நிரந்தரமாகக் கண்பார்வையிழந்த ஆங்கிலக்கவி மில்டன் அதன் பிறகே ஆங்கிலத்தின் மிகச்சிறந்த காவியமான இழந்த சொர்க்கத்தை எழுதினார்.

2.விபத்தில் ஒரு காலையே இழந்த இளம்பெண் சுதாசந்திரன் அதன்பிறகே செயற்கைக்காலைப் பொருத்திக்கொண்டு சிறந்த நாட்டியக்கலைஞராகவும்நடிகையாகவும் ஓளிவீசிக்கொண்டிருக்கிறார்.

3.தூக்குமேடை ஏறும் முன்நாளில் கூடப் பதற்றப்படாமல்கடைசியாகத் தனக்குப்பிடித்த குலோப் ஜாமனைச் சுவைத்துவிட்டுலெனினின் 'அரசும் புரட்சியும்என்ற நூலைப் படித்துகொண்டு ஒவ்வொரு கணத்தையும் அர்த்தமுள்ளதாக்கியவர் விடுதலை வீரர் பகத் சிங்.

4.கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோதுஅவர் இறந்துவிட்டதாக அடிக்கடி வசந்தி பரவத்தொடங்கியதை அறிந்துதம் மனைவியிடம், ''மதுரம்! நான் சாகலேன்னா இவங்க விடமாட்டாங்க போல இருக்கே. இவங்க திருப்திக்காவது ஒருதரம் நான் அவசியம் சாகணும் போலிருக்கிறதே''என்று அந்த இறுதிநாள்களிலும் நகைச்சுவையைத் தவழவிட்டார்.

5. பிரிட்டனில்  21 வயது இளைஞர் ஒருவர் முற்றிலும் அத்தனை உறுப்புகளையும் முடக்கிப்போடும் மோசமான நரம்புநோயால் பாதிக்கப்பட்டு  பேச்சும்உடல்அசைவும் இழந்தும்கவலைப்படாதுசக்கரநாற்காலியில் இருந்துகொண்டுமின்னணு கருவியைக்கொண்டே தம் சிந்தனைகளை வெளிப்படுத்தி வருகிறார். அவரே இன்றைய தலைசிறந்த இயற்பியல் விஞ்ஞானிகளுள் ஒருவரும்ஐன்ஸ்டைனுக்குப்பிறகு மாபெரும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவரும்அண்மையில் அமெரிக்காவில் மிக உயரிய அறிவியலாளர் விருதைப்பெற்றவருமான  ஸ்டிபன் ஹாக்கின்ஸ்.

பிரச்சினை எவ்வளவு பெரிதாயினும் அதனோடு ஐக்கியமாகி கூடவே வாழ்ந்து வசப்படுத்துவதற்கு உரிய துணிவையும்பொறுமையும் வளர்த்துக்கொண்டால் இந்தச் சாதனையாளர்கள் வரிசையில் நாமும் சேரலாம்.

தவிர்க்கமுடியாதவற்றைத் தாங்கும் வழிகள்:

1.சந்தித்தே ஆகவேண்டிய பிரச்சினைகளைக்கண்டு ஓடினால் தெருநாய்போல் அது நம்மைத் துரத்தும். துணிவு என்ற கல்லைக் கையில் எடுத்தால் அது தலைதெறிக்க ஓடும். அஞ்சாமையை அணிகளனாகப் பூண்டவர்களுக்கு மலையளவு துன்பங்களும் கடுகாகும்.

2.'வாழ்க்கை துன்பமயமானதுதான். அது துன்பமயமானது என்று உணர்ந்தபின் துன்பப்படத் தேவையில்லைஎன்று புத்தர் கூறியதைச் சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தால் எந்தத் துன்பத்திலிருந்தும் விடுதலை கிடைக்கும். துன்பங்களை நேசிக்கற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில் துன்பங்களே நம்மைச் செதுக்கும் சிற்பிகள்.

3.உங்களைவிடத் துன்பப்படுபவர்கள் உங்களைச் சுற்றி நிறைய  இருப்பதைக் கண்திறந்து பாருங்கள். உங்கள் துன்பம் தூசியாகும்.  'உலகம் என்பது நாடகமேடை. நாமெல்லாம் நடிகர்கள்!என ஷேக்ஸ்பியர் சொன்னதை ஏற்றால்வாழ்வில் சந்திக்கும் துன்பங்களும் மேடையில் நடிகர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் போல நம்மைத் தாக்கா.

4.சாக்ரடீசையும்அபிரகாம் லிங்கனையும்விடக் குடும்பவாழ்வில் துன்பப்பட்டவர்கள் யாரிருக்க முடியும்இதனையும் மீறி சிந்திக்கவும்,செயல்படவும்உயரவும் அவர்களுக்கு உதவியது அளவற்ற பொறுமை. பொறுமையாக இருந்துபதட்டமடையாமல் பிரச்சினைகளோடு வாழ்வது எப்படிஎன உங்கள் சூழலுக்கேற்ப சிந்தியுங்கள். புதிய ஆற்றல் பிறக்கும்.

(இணையத்தில் படித்து ரசித்தது)