Friday, April 22, 2011

விவேகானந்தரின் பொன்மொழிகள்




* இருதயம் விரிவடைந்துள்ள இடத்தில்தான் உண்மை ஞானம் உதிக்கும். அந்த
உண்மை ஞானம்தான் நம்பிக்கை.

* அடக்கப்படாமல் உள்ள மனமும், அறவழியில் செலுத்தப்படாத மனமும் நம்மை
எப்போதும் கீழ் நோக்கியே இழுத்துச் சென்று அழித்துவிடும். அடக்கப்பட்ட
மனமும், அறவழியில் செல்லும் மனமும் நமக்குப் பாதுகாப்பை அளித்திடும்.
உலகபந்தங்களில் இருந்து விடுதலையளிக்கும்.

* கபடம் இல்லாத நாத்திகன் வஞ்சகனை விடச் சிறந்தவன் ஆவான்.

* காமம், பொன்னாசை இவைகளால் ஆளப்படும் அற்பர்கள்
பொருட்படுத்தப்படக்கூடியவர்கள் அல்லர்.

* எவர் ஒருவருடைய நெஞ்சு ஏழை மக்களுக்காகத் துயரத்தில் அழுமோ, அவரையே
நான் மகாத்மா என்பேன்.

* அன்பு நெறியிற் சென்று உலகம் உய்வடைந்திட வழிகளைக் கூறும் முறை மதம் எனப்படும்.

* கோழைகளே பாவ காரியங்களைப் புரிந்திடுவர். தைரியமுடையோர் ஒருக்காலும்
பாவம் செய்யார்.

* பலமற்ற மூளையில் நாம் எதையுமே செய்ய இயலாது. அதனால் நாம் அதைப்
பலப்படுத்த வேண்டும்.

* அச்சமே நமக்குத் துயரத்தைத் தருவது. அச்சமே கேட்டை விளைவிப்பது. அச்சமே
மரணத்தைத் தருவது. நமது உண்மை இயல்பை நாம் அறிந்து கொள்ளாமல்
இருப்பதனால்தான் நமக்கு அச்சம் ஏற்படுகின்றது.

* இவ்வுலகில் பிறந்த நீங்கள் அதற்கு அடையாளமாக ஏதேனும் விட்டுச்
செல்லுங்கள். இல்லையேல் உங்களுக்கும் மரங்கள் கற்களுக்கும் வேறுபாடு
இல்லாமற் போய்விடும்.

* முதலில் வேலைக்காரனாயிருக்கக் கற்றுக் கொண்டால், எஜமானாகும் தகுதி
பின்னர் தானாகவே வரும்.

* அன்புடையவனே வாழ்பவன். சுயநலமுடையவனோ செத்துக் கொண்டிருக்கின்றான் என்றே பொருள்.

* சேர்ந்து வாழ்தலே சிறந்த வலிமையாகும்.

* எந்த வேலையாக இருந்தாலும் அதைத் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக
மாற்றுபவனே அறிவாளியாவான்.

* தன்னை அடக்கப் பழகிக்கொண்டவன் வேறு எதற்கும் சிக்கமாட்டான். அத்தகைய
தகுதி உள்ளவனே உலகில் நன்றாக வாழத் தகுதியுள்ளவன்.

* பலமே வாழ்வு, பலவீனமே மரணம்.

* தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இவை மூன்றும் வெற்றிக்கு
இன்றியமையாதவையாகும். அத்துடன் இவை அனைத்துக்கும் மேலாக அன்பு இருந்தாக
வேண்டும்.

* உறுதியுடன் இரு, அதற்கு மேலாகத் தூய்மையானவனாகவும், முழு அளவில்
சிரத்தை உள்ளவனாகவும் இரு.

1 comment: